செய்திகள்
கோப்புபடம்

பறவைகள் சரணாலயமாக மாறுமா நஞ்சராயன்குளம் - இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-10-19 08:54 GMT   |   Update On 2021-10-19 08:54 GMT
பல்லாயிரம் மைல்கள் தாண்டி பறந்து வரும் பறவைகளுக்கு திருப்பூரின் வேடந்தாங்கலாக நஞ்சராயன் குளம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
திருப்பூர்:

திருப்பூர் நகரை ஒட்டி அமைந்துள்ள நஞ்சராயன் குளம் 450 ஏக்கர் பரப்பு கொண்டது. நல்லாற்றிலிருந்து இந்த குளத்துக்கு நீர் ஆதாரம் கிடைக்கிறது. இந்த குளத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் பறவைகள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி செல்கின்றன.

இதனை பறவைகள் சரணாலயமாக மாற்றி பராமரிக்கவும், குளத்தை முறையாக தூர்வாரி, நீர் வற்றாமல் தேங்கும் விதமாகவும் குளத்தின் கரையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கவும், குளத்துக்கு வரும் நீர் அதில் சேகரமாகும் முன் சுத்திகரிப்பு செய்து கழிவுகளற்ற குளமாக பராமரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதையடுத்து திருப்பூர் இயற்கை கழகம் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2014 மற்றும் 2020ம் ஆண்டுகளில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இயற்கை கழக நிர்வாகிகள் ரவீந்திரன், ராம்குமார் மற்றும் நல்லசிவம் ஆகியோர் திருப்பூர் தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ., செல்வராஜை சந்தித்து விளக்கினர். 

எம்.எல்.ஏ.,செல்வராஜ் கூறுகையில்:

பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை இருந்து வருவதை அறிந்தேன். நம் திருப்பூரில் ஒரு பறவைகள் சரணாலயம் அமைவது நமக்குத்தான் பெருமை. பல்லாயிரம் மைல்கள் தாண்டி பறந்து வரும் பறவைகளுக்கு திருப்பூரின் வேடந்தாங்கலாக நஞ்சராயன் குளம் மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. கண்டிப்பாக இதுகுறித்து முதல்வரிடம் தனிப்பட்ட கவனத்துக்கு கொண்டு சென்று முயற்சி எடுப்பேன் என்றார்.
Tags:    

Similar News