செய்திகள்
கொலை

குடித்தே சொத்தை அழித்த தொழிலாளியை அடித்து கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது

Published On 2021-10-15 13:42 GMT   |   Update On 2021-10-15 13:42 GMT
குடித்தே சொத்தை அழித்த தொழிலாளியை அடித்துக் கொன்ற மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செயதனர்.

பழனி:

பழனி நெய்க்காரப்பட்டி அருகே உள்ள வாய்க்கால்பாலம் பகுதியில் வசித்து வந்தவர் கருப்புச்சாமி (வயது 45). இவரது மனைவி மீனாட்சி (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த கருப்புச்சாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் சரிவர வேலைக்கு செல்லாமலும் வீட்டுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளர்.

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கருப்புச்சாமி தங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக இருந்த ஒரே வீட்டையும் விற்று முழுவதும் குடித்தே அழித்து விட்டார். இதனால் மீனாட்சி தனது குழந்தைகளுடன் அண்ணன் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு அங்கு சென்ற கருப்புச்சாமி இனிமேல் தான் குடிப்பதில்லை என்றும் ஒழுங்காக வேலைக்கு செல்வதாக கூறி மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி வீட்டுக்கு மீனாட்சி சென்றார்.

ஆனால் மீண்டும் குடித்து விட்டு வந்து கருப்புச்சாமி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி, அவரது அண்ணன் ராஜேந்திரன் (59), உறவினர் சக்தி சிவன் (25) ஆகியோர் கருப்புச்சாமியை கடுமையாக தாக்கினார். இதில் கருப்புச்சாமி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் டி.எஸ்.பி. சத்தியராஜ், பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். கருப்புச்சாமி உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை அடித்துக் கொன்ற மனைவி மீனாட்சி உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News