சங்ககிரி அருகே நிதி நிறுவன அதிபர் அடித்துக்கொலை?- மனைவியிடம் போலீசார் விசாரணை
சங்ககிரி:
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, புள்ளாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தயானந்தன் (வயது 30). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த அன்னபிரியா (21) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களூக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் தயானந்தன் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துக்கொண்டு இரவு 10 மணியளவில் உறங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் தயானந்தனின் மனைவி அன்னபிரியா தனது உறவினர்களுக்கு மொபைலில் அழைத்து தனது கணவருக்கு ஜன்னி வந்ததாகவும் அதனால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதாகவும் கூறினார்.
அதன் பேரில் உறவினர்கள் வந்து பார்த்தனர். பின்பு உடனடியாக தேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர்.
தயானந்தனை அவரது மனைவி அடித்துக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடந்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து தயானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.