செய்திகள்
வீடு கட்டி தருவதாக ரூ.14.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
பல்லடம் டி.என்.டி. நகரில் வசித்து வரும் ரத்தினவேல் மகன் முத்துகுமார் வங்கி மூலம் கடன் பெற்று வீடு கட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.
அவினாசி:
அவிநாசி அருகே அய்யம்பாளையத்தில் அவிநாசியை சேர்ந்த பழனிசாமி, வெள்ளிங்கிரி ஆகியோர் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனை பிரிவை 2019ல் அமைத்துள்ளனர்.
இந்த இடத்தில் பல்லடம் டி.என்.டி. நகரில் வசித்து வரும் ரத்தினவேல் மகன் முத்துகுமார் வங்கி மூலம் கடன் பெற்று வீடு கட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.
இதை நம்பி, திருப்பூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (37) அவிநாசி அஞ்சல் நிலைய வீதியில் உள்ள முத்துகுமாரின் அலுவலகத்திற்கு சென்று வீடு வாங்குவதற்காக முன்பணமாக ரூ.1.85 லட்சம் செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.
இருப்பினும் ஓராண்டாகியும் வீடு கட்டித் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். பிறகு முத்துகுமாரைத் தொடர்பு கொண்டபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் இதுபோல அவர் 15க்கும் மேற்பட்டோரிடம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் முத்துகுமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.