செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் 40 ரவுடிகள் கைது - போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் நடந்த தீவிர வேட்டையில் 40 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.
திருவாரூர்:
தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்து வருகின்றனர். இதேபோல வழிப்பறி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எனவே கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், இந்த குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் ரவுடிகளை பிடிக்க தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வேட்டையில் 40 ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 10 தனிப்படை போலீசார் 3 நாட்கள் நடத்திய அதிரடி வேட்டையில் 40 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், இயல்பு வாழ்கை குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்றார்.