செய்திகள்
கோப்புபடம்.

தரம் குறைவான விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை - உற்பத்தியாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

Published On 2021-09-26 07:38 GMT   |   Update On 2021-09-26 07:38 GMT
அனைத்து விதை ரகத்திற்கும் பதிவுச்சான்று மற்றும் அனைத்து விதை குவியல்களுக்கும் முளைப்புத்திறன் அறிக்கையை வினியோகஸ்தர்களிடமிருந்து பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
உடுமலை:

உரிமம் இல்லாமல் தரமற்ற விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டும் விவசாயிகள் விதைகள் வாங்கவேண்டும். அதிகாரிகள் ஆய்வின் போது கடைகளில் இருப்புப்பதிவேடு, கொள்முதல் மற்றும் விற்பனை பட்டியல், காலாவதி தேதி பதிவேடு, பதிவுச்சான்று, முளைப்புத்திறன் அறிக்கை, விதை இருப்புப்பலகை ஆகியவை சரியாக பராமரிக்கப்படுவதை  விதை ஆய்வாளர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதை ரகத்திற்கும் பதிவுச்சான்று மற்றும் அனைத்து விதை குவியல்களுக்கும் முளைப்புத்திறன் அறிக்கையை வினியோகஸ்தர்களிடமிருந்து பெற்று விற்பனை செய்ய வேண்டும். இந்த அறிக்கை இல்லாத விதை குவியல்கள் இருந்தால் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.விற்பனையாளர்கள் விதையின் பெயர், ரகம், காலாவதி தேதி, விதையின் அளவு அடங்கிய ரசீது தவறாமல் விவசாயிகளுக்கு வழங்கவும் அதில், விற்பனையாளர் மற்றும் விவசாயிகளின் கையொப்பம் கட்டாயம் இருக்க வேண்டும். 

அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. விற்பனை மையங்களில் உள்ள விதைக்குவியல்களில் இருந்து முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை பரிசோதனைக்காக விதை ஆய்வாளர்களால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனை முடிவில் விதையின் தரம் குறைவாக இருப்பது தெரிந்தால் விதை உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய உரிமம் பெற, விற்பனை மையத்தின் இருப்பிட வரைபடம், வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News