செய்திகள்
மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க புதிய திட்டம் அறிமுகம்
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி-வினா இணைய வழியில் நடத்தப்பட உள்ளன.
திருப்பூர்:
ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கும்நிலை இருந்தது. போதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மாணவர்களுக்கு சுலபம் எனினும் ஏழை, எளிய மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கிறது. மருத்துவர்கள் ஆலோசனைகளின் படி பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில் 45 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும் சிறப்பு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் இந்த வினாடி - வினா இணைய வழியில் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறுகையில்:
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 10 கேள்விகள் கேட்கப்படும். கணினிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை குழுக்களாக பிரித்து காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். முதல்கட்டமாக 350 மாணவிகள் பங்கேற்றனர் என்றார்.