செய்திகள்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு
கரூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் மூலம் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது.
கரூர்:
தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர். சிறப்பு பிரிவினருக்கான அரசு பள்ளிகளில் இடஒதுக்கீடு மாணவ- மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
அந்தவகையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் மூலம் விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கவுசல்யாதேவி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு பிரிவினருக்கான பிரிவில் 2 மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். இந்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவ- மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புவியியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு ஏராளமான மாணவர்கள், பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.
இதில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.