செய்திகள்
மூலனூர் அருகே சட்டவிரோதமாக ஆற்றுமணல் பதுக்கல்
பன்னீர்செல்வம் தோட்டத்தில் 12 யூனிட், கவுதமன் தோட்டத்தில் 24 யூனிட் என 36 யூனிட் மணல் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூரில் உள்ளது தட்டாரவலசு கிராமம். இங்குள்ள அமராவதி ஆற்றில் இருந்து இரு தோட்டங்களுக்கு மணல் திருடி பதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தாராபுரம் சப்- கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின் படி, வருவாய், பொதுப்பணி, கனிம வளம், போலீசார் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இரு நாட்களுக்கு முன்பு தட்டாரவலசு கிராமத்தில் உள்ள தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து இதுதொடர்பான அறிக்கையை சப்-கலெக்டருக்கு சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் தாராபுரம் தாசில்தார் சைலஜா மூலனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் மணல் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக, கவுதமன் (வயது 45), பன்னீர்செல்வம் (40) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பன்னீர்செல்வம் தோட்டத்தில் 12 யூனிட், கவுதமன் தோட்டத்தில் 24 யூனிட் என 36 யூனிட் மணல் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த ஆற்று மணலை கடந்த ஓராண்டு முதல், ஒன்றரை ஆண்டுக்குள் எடுத்திருக்க வேண்டும். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.