செய்திகள்
நானோ யூரியாவை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள்
20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் 94 வகை பயிர்களில் பரிசோதிக்கப்பட்டது.
உடுமலை:
நானோ யூரியாவை பயன்படுத்த வேண்டுமென வேளாண் துறையின் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மேலாண்மை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
பயிர்களுக்குத்தேவையான பேரூட்டச்சத்துக்களில் மிகவும் முக்கியமானது தழைச்சத்து ஆகும். இதனை பொதுவாக யூரியா அல்லது அமோனியா கல் வகை உரங்கள் வாயிலாக பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
விவசாயத்தில் பெரும்பாலும் குருணை வடிவ யூரியாவே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதில் 46 சதவீதம் தழைச்சத்தான நைட்ரஜன் உள்ளது. நானோ யூரியா நானோ தொழில்நுட்பத்தின் வாயிலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசடையாமல் பயிர்களுக்கு தழைச்சத்து கொடுப்பதோடு, உர பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட கூடுதல் என்பதால் பயிர்களுக்கு குறைந்த அளவே போதுமானது.
20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் 94 வகை பயிர்களில் பரிசோதிக்கப்பட்டது. இதனை பயன்படுத்துவதன் வாயிலாக 8 சதவீதம் மகசூலை அதிகரிக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உரவிற்பனை நிலையங்களிலும் தேவையான அளவு இருப்புள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.