செய்திகள்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் விற்பனை-வியாபாரிகள் மீது புகார்
பொதுவாக கறவை மாட்டு பாலில் 4.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பு அற்ற திடப்பொருட்கள் இருத்தல் வேண்டும்.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல் கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாகும். குறிப்பாக கறவை மாடு வளர்த்தல் தொழில் மேலோங்கி வருகிறது. இந்தநிலையில் கறவை பாலில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் சிலர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
பொதுவாக கறவை மாட்டு பாலில் 4.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பு அற்ற திடப்பொருட்கள் இருத்தல் வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த விலைக்கு கிடைப்பதால் அதனை வாங்கி கறவைப் பாலில் கலந்து விற்கப்படுகிறது. இதனால் பாலில் வழக்கமாக உள்ள சக்தி கிடைக்கப்பெறுவது இல்லை.
இந்த பாலை ஆய்வுக்கூடத்தில் வைத்து சோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை கலந்து விற்பனை செய்யப்படுவது கலப்படமாகும். துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.