செய்திகள்
உடுமலை அருகே சிறுத்தை நடமாட்டம் - கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரி பொன்னாலம்மன்சௌலை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜிலேப்ப நாயக்கனூர். இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் விவசாயக் கூலிகளாக பலர் ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். கடந்த 4-ந்தேதி விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடித்து கொன்றது மேலும் இரண்டு பூனைகளையும் வேட்டையாடியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு கூட செல்லாமல் இருக்கின்றனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரி பொன்னாலம்மன்சௌலை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் பொதுமக்கள் கூறிய படி ஆடு, பூனைகளை வேட்டையாடியது சிறுத்தை தான் என்பதை உறுதி செய்ய வனத்துறையினர் ஜிலேப்பநாயக்கனூர் கிராமத்தில் 4 இடங்களில் கேமராவை பொருத்தியுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கேமராவில் பதிவாகிவிடும். அதன் பின்னர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது முதற்கட்ட பணியில் ஈடுபட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.