செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் அருகே குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

Published On 2021-09-03 10:02 GMT   |   Update On 2021-09-03 10:02 GMT
நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மதியம் திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மதியம் திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. மழையின் காரணமாக மாநகரில் குமரன்ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கல்லூரி சாலை அருகே உள்ள கல்லம்பாளையம் பாலத்தில் மழைநீர் அதிகளவு சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.  

ஊத்துக்குளி, ஊத்துக்குளி ரயில் நிலையம், கொடியம்பாளையம் நால்ரோடு, பூசாரிபாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்தநிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான தூரலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் காலையில் பணிக்கு சென்ற பனியன் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்கள் குடைபிடித்தப்படி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் நிலக்கடலை பயிரிட விவசாய நிலங்களை தயார்ப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
 
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அவினாசி-38, ஊத்துகுளி- 44, காங்கேயம்-14, தாராபுரம்-4, குண்டடம்-12, உடுமலை-3, மடத்துக்குளம்-5, கலெக்டர் கேம்ப் ஆபீஸ்-34.40, திருப்பூர் தெற்கு-32,திருப்பூர் வடக்கு-20. மாவட்டம் முழுவதும் மொத்தம் 258,40மி. மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News