செய்திகள்
பெரியகுளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
பெரியகுளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வெங்கடாசலபுரத்தில் பட்டாளம்மன், முத்தையா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் பாலசுப்பிரமணியம். இவர் கடந்த வாரம் கோவிலை திறந்து பூஜை செய்துவிட்டு, பூட்டிவிட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியம் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டதுடன், அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணியம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.