செய்திகள்
விபத்து

ராசிபுரம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதி அண்ணன்-தம்பி பலி

Published On 2021-08-28 11:28 GMT   |   Update On 2021-08-28 11:28 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் அண்ணன், தம்பி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சி.எஸ்.புரம் தெற்குபட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன்கள் ராமசாமி(வயது38), ரங்கநாதன்(34). இவர்கள் பெயிண்டர்களாக வேலை செய்து வந்தனர்.

இன்று காலை அவர்கள் நாமக்கல்லில் ஒரு தனியார் கார் நிறுவனத்துக்கு பெயிண்ட் அடிப்பதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். வழியில் நாசிபுரம் தனியார் கல்லூரி அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து மதுரை நோக்கி மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது. திடீரென தறிகெட்டு ஓடிய அந்த லாரி சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த ராமசாமி, ரங்கநாதன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் சாலை ஓரம் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராமசாமி, ரங்கநாதன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ராமசாமிக்கு தேவி என்ற மனைவியும், ரங்கநாதனுக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.
Tags:    

Similar News