செய்திகள்
பால் சுரக்க மாடுகளுக்கு ஊசி - கால்நடை டாக்டர்கள் எச்சரிக்கை
குறிப்பாக உடல் எடைக்கு ஏற்றவாறு பசுந்தீவனம், அடர் மற்றும் உலர் தீவனத்தை சரிவிகிதத்தில் அளிக்க கால்நடைகள் வளர்ப்போர் அறிவுறுத்தப்படுகின்றனர்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். அதன்படி உடுமலை கோட்டத்தில் 21 கால்நடை கிளை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
இதனால் கறவை மாடுகளில் பால் உற்பத்தியை பெருக்கவும் அதன் வாயிலாக விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் கால்நடைத்துறையால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.
குறிப்பாக உடல் எடைக்கு ஏற்றவாறு பசுந்தீவனம், அடர் மற்றும் உலர் தீவனத்தை சரிவிகிதத்தில் அளிக்க கால்நடைகள் வளர்ப்போர் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் சிலர் கறவை மாடுகளில் பாலை அதிகளவில் சுரக்கச்செய்யும் வகையில் ‘ஆக்சிடோசின்’ ஊசியைப் பயன்படுத்துவதாக புகார் எழுகிறது.
இவ்வாறு ‘ஹார்மோன்’ ஊசியைப் பயன்படுத்தினால் மடியில் உள்ள மொத்த பாலும் சுரப்பது மட்டுமின்றி மாடுகள் இறக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் கூறுகையில்:
‘மாடு கன்று ஈனும் போது கர்ப்பப்பை விரிந்து கன்றுக்குட்டி எளிதாக வெளிவருவதற்காக ‘ஆக்சிடோசின்’ ஊசி போடப்படுகிறது. மருத்துவப் பயன்பாடு கருதி செலுத்தப்படும் இந்த ஊசியை தொடர்ந்து பயன்படுத்தினால் மாடு இளைத்து விடும். அதன் வாயிலாக பெறப்படும் பாலை குடிப்போருக்கு பாதிப்பு ஏற்படும். மருந்துக்கடைகளில் ‘ஆக்சிடோசின்’ மருந்து விற்பனைக்கு தடை உள்ளது என்றனர்.