செய்திகள்
கொள்ளை

அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன்-ரூ.6 லட்சம் ரொக்கம் திருட்டு

Published On 2021-08-12 09:32 GMT   |   Update On 2021-08-12 09:32 GMT
தஞ்சையில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை சீதா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள், ரேகைகளை சேகரித்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News