நெல்லை டவுனில் இன்று கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
நெல்லை:
நெல்லை டவுனில் உள்ள கடை வியாபாரிகளுக்கும் நடைபாதை வியாபாரி களுக்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த பிரச்சினை காரணமாக நடைபாதை வியாபாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடை ஊழியர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர்கள் சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்ய டவுன் போலீஸ் நிலையத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் வழக்கு பிரிவை மாற்றவில்லை.
இதை தொடர்ந்து நெல்லை டவுனில் உள்ள வடக்கு ரத வீதி மற்றும் கீழரத வீதி வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் இன்று காலை வழக்கமாக 9 மணிக்கு திறக்கப்படும் ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள் இன்று காலை திறக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக ஒவ்வொரு கடை முன்பும், வியாபாரிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் பிறகு 10½ மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன.
இந்த சம்பவத்தையொட்டி நெல்லை டவுன் வடக்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.