செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே இரு தரப்பினர் மோதலில் 7 பேர் கைது

Published On 2021-08-04 10:04 GMT   |   Update On 2021-08-04 10:04 GMT
ஒரு தரப்பை சேர்ந்த ஒருவர் தனது காரில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மீது அதிவேகமாக சென்று மோதியதாக கூறப்படுகிறது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராயர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சிட்கோ தொழில்பேட்டை அருகில் வசிக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட 2 தரப்பினர் மதுக்கடையில் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் அருகே உள்ள மைதானத்திற்கு சென்று அமர்ந்திருந்தபோது ஒரு தரப்பை சேர்ந்த சிலர் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களிடம் புகையிலை கேட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கி கொண்டனர்.

ஒரு தரப்பை சேர்ந்த ஒருவர் தனது காரில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மீது அதிவேகமாக சென்று மோதியதாக கூறப்படுகிறது. இதில் ராயர்பாளையத்தை சேர்ந்த சங்கரலிங்கம்(வயது 25) என்பவருக்கு கால் முறிந்தது. திண்டுக்கல் நத்தத்தை சேர்ந்த கண்ணன்(26), ஜோலார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(24) ஆகியோருக்கு மண்டை உடைந்து உடல் முழுக்க பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காரில் மோதி விட்டு அதனை ஓட்டி வந்தவர் அங்கு இருந்து தலைமறைவானார்.

இந்த வழக்கில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ், சக்திவேல், சரவணக்குமார், மகேஷ், விக்கி மற்றும் ராயர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், கர்ணன் ஆகிய 7 பேர் மீதும் பல்லடம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கதிர், பிரபுவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News