செய்திகள்
பவர் டேபிள் நிறுவனங்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்-திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தி முடக்கம்
உற்பத்தி செலவு அதிகரித்து ள்ளதால் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தி உடனடியாக ‘ஜாப்ஒர்க்‘ கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டுமென பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் சைமாவுக்கு கடிதம் அனுப்பியது.
திருப்பூர்:
திருப்பூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் திருப்பூரில் இயங்கிவரும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு பனியன் உள் ளிட்ட ஆடைகள் தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கட்டண ஒப்பந்தம் மூலம் பனியன் நிறுவனங்களுக்கு பவர்டேபிள் நிறுவனங்கள் சார்பில் ஆடைகள் தைத்து கொடுக்கப்படுகிறது. இந்தநிலையில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து கடந்த 2016-ல் மேற்கொண்ட கட்டண ஒப்பந்தம் கடந்த 2020 அக்டோபரில் முடிவடைந்தது. கொரோனாவால் புதிய ஒப்பந்தம் தாமதமானது.
உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தி உடனடியாக ‘ஜாப்ஒர்க்‘ கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டுமென பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் சைமாவுக்கு கடிதம் அனுப்பியது.
‘சைமா’ சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் பவர் டேபிள் நிறுவனங்கள் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இதனால் திருப்பூரில் இயங்கும் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பதை பவர் டேபிள் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான உள்நாட்டு ஆடை உற்பத்தி முடங்கியுள்ளது. இன்றுடன் ரூ.15கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பவர்டேபிள் உரிமையாளர் சங்க துணை செயலாளர் முருகேசன் கூறுகையில்,
இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற சூழலில் தான் உற்பத்தியை நிறுத்தி போராடுகிறோம். பழைய ஒப்பந்தம் முடிந்து 9 மாதமாகிவிட்டது. ‘சைமா’ சங்கம் கட்டண உயர்வு பேச்சு வார்த்தைக்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.
சைமா தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், பனியன் தொழிலாளர் சம்பள பேச்சுக்குப்பின் கட்டண உயர்வு பேச்சு தொடங்கலாம் என பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துக்கு ‘சைமா’ தரப்பில் கடிதம் அனுப்பினோம். அதற்கு பவர்டேபிள் சங்கம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
ஒப்பந்த பேச்சுவார்த்தை என்பது தனிநபர் முடிவு செய்வது அல்ல. அவசரகதியில் பவர்டேபிள் துறையினர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் குதித்து விட்டனர் என்றார்