செய்திகள்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு
ஆகஸ்ட் 9-ந்தேதி வரை கிராம கூட்டம், நடைபயணம், வாகன பிரசாரம், தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., அமைப்புகளின் கூட்டுக்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், தொழிற்சங்க செயலாளர் பஞ்சலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய வேளாண் சட்டம், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த மசோதா உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தும், 100 நாள் திட்டத்தை பாதுகாக்க கோரியும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்தில் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை கிராம கூட்டம், நடைபயணம், வாகன பிரசாரம், தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. வெள்ளையனே வெளியேறு இயக்க நாளான ஆகஸ்ட் 9-ந்தேதி அன்று திருப்பூர், உடுமலை பகுதிகளில், மனித சங்கிலி போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.