செய்திகள்
பூசாரிகள் நலவாரியம்-இந்து அமைப்பு மனு
வருவாய் இல்லாத கோவில்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும்.
திருப்பூர்:
இந்து பரிஷத் பேரமைப்பு சார்பில் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கோவில்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் பூசாரிகளுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். வயதான பூசாரிகளுக்கு ஓய்வூதிய உதவியும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
கோவில்களுக்கு விதிக்கப்பட்ட 2சி(1) மின் கட்டண உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வருவாய் இல்லாத கோவில்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பூசாரிகள் நலவாரியம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிராம பூசாரிகளுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. எனவே பூசாரிகள் நலவாரியத்தை உயர்பெறச்செய்து புதிய உறுப்பினர்களை சேர்த்து முறையாக நடத்த வேண்டும்.
சிறிய கோவில்களுக்கு அரசே பூஜை பொருட்களை வழங்க வேண்டும். பெரிய கோவில்களுக்கு வரும் பசுக்களை கிராம கோவில்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.