செய்திகள்
34 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
விவசாயிகள் யாராவது தானியங்களில் விஷம் வைத்ததில் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த முத்தணம்பாளையம் ஒத்தக்கடை கிராமத்தில் உள்ள சில விவசாய தோட்டங்கள் அருகே அடுத்தடுத்து 34 மயில்கள் இறந்து கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உயிரிழந்த மயில்களின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயிகள் யாராவது தானியங்களில் விஷம் வைத்ததில் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயி பண்ணாரி(வயது 47) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் உள்ள வனவியல் விரிவாக்க மையம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பண்ணாரி கைது செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நல்லூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு கட்ட பேச்சுக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.