செய்திகள்
கோப்புபடம்

கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் 4 வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-07-10 15:08 GMT   |   Update On 2021-07-10 15:08 GMT
சேலத்தில் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர், 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:

சேலம் குமாரசாமிபட்டி ராம்நகர் ஓடை பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 40). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீரங்கனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் மல்லூர் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கபாலி (30). இவர் சம்பவத்தன்று தாதகாப்பட்டி கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு அன்னதானப்பட்டி போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய போது அவர் வைத்து இருந்த பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரும் பல்வேறு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு இருப்பதும், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி போலீசார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா, சீரங்கன், கபாலி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இவர்கள் 2 பேரும் தொடர்ந்து 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News