செய்திகள்
போராட்டம்

திருவெண்ணைநல்லூர் அருகே 100 நாள் வேலை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-07-08 08:49 GMT   |   Update On 2021-07-08 08:49 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே 100 நாள் வேலை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமம் கடந்த ஆண்டு தனி ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது.

1-வது வார்டு மற்றும் ரோட்டு தெரு மக்களின் 100 நாள் வேலைத்திட்ட அட்டைகள் சரியாக இல்லை என்றும், 100 நாள் வேலை உங்களுக்கு வழங்கப்படாது என்றும் கூறப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள கடலூர்-சித்தூர் சாலையில் திரண்டனர்.

பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார், ஊராட்சி செயலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு முறையாக 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு அதிகாரிகள் உங்களது பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News