செய்திகள்
சாலை விதிகளை பின்பற்றி போலீஸ் வாகனங்களை இயக்க வேண்டும் - சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அறிவுரை
சாலை விதிகளை பின்பற்றி போலீஸ் வாகனங்களை இயக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
நாகர்கோவில்
குமரி மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று மாதந்தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்வது வழக்கம்.
ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக போலீஸ் வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருந்தன. இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார்.
இதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
வாகனங்களை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், வாகனங்களில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா? என்பது பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "போலீஸ் வாகனங்களை நாள்தோறும் முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்" என்றார்.