உளுந்தூர்பேட்டை அருகே மது வாங்கி தரமறுத்த வாலிபரை தாக்கியவர் கைது
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கிழக்கு மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (வயது 35).
சம்பவத்தன்று தர்மர் மற்றும் அவரது நண்பர் பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரும் சேர்ந்து தர்மருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் கிழக்கு மருதூர் கிராமத்தில் இருந்து சேந்தநாடு நோக்கி வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினரான சேதுராமன் (25), தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தர்மரின் வாகனத்தை வழிமறித்து தங்களுக்கு சேந்த நாட்டிலுள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி வருமாறு கேட்டனர். தர்மர் மதுவாங்கிவர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சேதுராமன் மற்றும் அவரது நண்பர்கள் தர்மரை தாக்கினர்.
இதில் காயமடைந்த தர்மர் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தர்மர் திருநாவலூர் போலீசில் சேதுராமன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் செய்தார்.
புகாரின் பேரில் சேதுராமனை திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்தார். மேலும் தகராறில் ஈடுபட்ட சேதுராமனின் நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.