கூடங்குளம் அருகே குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை
நெல்லை:
கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் மோஸ். இவரது மனைவி ரபீனா(வயது 26). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் நடந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த தம்பதியினருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கிடையே கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளின்போது ரபீனா தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ரபீனா வீட்டில் இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே மோஸ் ஓடிவந்து ரபீனாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ரபீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.