செய்திகள்
சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் போலீசாரின் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை மீம்ஸ்கள்
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்ட போலீஸ் சார்பில் சமூக வலைதளங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உட்கோட்ட போலீசாரின் விழிப்புணர்வு பணிகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. உதாரணமாக ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக உட்கோட்ட போலீசாரால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சினிமா காட்சிகளுடன் இணைத்து ‘மீம்ஸ்’களை உருவாக்கி சமூக வலைதளங்களில் உலவ விடுகின்றனர். இதற்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
உதாரணமாக உடுமலை உட்கோட்டத்தில் சேவல் சண்டையில், 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ‘குதிச்சிருடா கைப்புள்ள’ என வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வடிவேலு காட்சியுடன் இணைத்து மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.இதேபோல் மதுபாட்டில் பறிமுதல், பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில் வாங்கி வருபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சினிமா நகைச்சுவை காட்சியுடன் இணைத்து அனைவரும் ரசிக்கும் வகையில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் இரவு ரோந்து செல்லும் இன்ஸ்பெக்டர்கள் விபரம், மொபைல் போன் எண்ணுடன் நாள்தோறும் வெளியிடப்படுகிறது. போலீசாரின் இத்தகைய பதிவுகள் சமூக ஆர்வலர்கள் வாயிலாக அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.