செய்திகள்
திருப்பூரில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு
தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பப்பட்டதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளே கார் ஏற்பாடு செய்து ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் உடைக்கும் ஆலை உள்ளது.இங்கு தொழிலாளர்கள் கொத்தடிமையாக வேலை பார்ப்பதாக திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து காங்கயம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.இதில் 8 வயது பெண் குழந்தையும் அடங்கும்.
அவர்களிடம் விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்ததும், அவர்களுக்கு குறைந்த ஊதியமே கொடுத்து வேலை வாங்கி வந்துள்ளதும் தெரியவந்தது.
அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பப்பட்டதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளே கார் ஏற்பாடு செய்து ஊருக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ஆலை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.