செய்திகள்
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா ஆஸ்பத்திரியில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்

Published On 2021-06-26 08:49 GMT   |   Update On 2021-06-26 08:49 GMT
சிவசங்கர் பாபாவுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை:

கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில்ஹரி இண்டர் நே‌ஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

இதற்கிடையே சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. அவரது பள்ளியை சேர்ந்த 3 முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்த போது அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருப்பது தெரியவந்தது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் டேராடூனுக்கு சென்ற போது சிவசங்கர் பாபா அங்கு இல்லை. பின்னர் டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதன்பின் சிவசங்கர் பாபாவிடம் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.


இதற்கிடையே கடந்த 18-ந் தேதி சிவசங்கர் பாபா தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் உடல்நிலை சீரானதையடுத்து இன்று மதியம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக நாளை மறுநாள் முதல் அவரை போலீஸ் காவலில் எடுக்கிறார்கள்.

Tags:    

Similar News