செய்திகள்
கோப்புப்படம்

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்-உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

Published On 2021-06-24 07:19 GMT   |   Update On 2021-06-24 07:19 GMT
வேளாண்மை துறை அதிகாரிகள் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
திருப்பூர்:

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் தமிழக அரசு விவசாயத்திற்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து இருப்பது விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனை உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் வரவேற்கின்றோம்.

தற்போது விவசாயிகள் வாய்க்காலில் பிரச்சினை என்றால் ஒரு துறையிலும், குளத்திற்கு பிரச்சினை என்றால் வேறு துறையிலும் என பல்வேறு துறைகளுக்கு சென்று தீர்வு கண்டு வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக விவசாய பிரச்சினைகளுக்கு தனி துறை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

இது சம்பந்தமாக புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசுடன் பேசி ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.ஏ.பி. பாசனத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாய நிலங்கள் அதில் தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகாமல் இந்த ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும்

தற்போது கொங்கு மண்டலப் பகுதிகளில் வெங்காய நடவு சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வெங்காய பயிருக்கு அடியுரமாக இடப்படும் டி.ஏ.பி. உரம் தற்போது கூட்டுறவு சங்கம் மற்றும் உரக்கடைகளில் ஒரு மூட்டை உரம் கூட இருப்பு இல்லாத நிலை உள்ளது. வெங்காய சாகுபடிக்கு போதிய டி.ஏ.பி உரம் போடவில்லை என்றால் விளைச்சல் கிடைக்காது. தமிழக அரசு 50 கிலோ கொண்ட டி.ஏ.பி.உரத்தை ரூ.1200-க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. ஆனால் வெளிசந்தையில் ரூ.1900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மை துறை அதிகாரிகள் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News