நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.
இவருக்கு இசக்கியம்மாள் (வயது 55) என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2 மகன்களும் திருமணமாகி குடும்பத்துடன் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
செல்வராஜ் தனது மகளை அதே தெருவில் தனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் செல்வராஜ் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
அவர்களது மருமகள்களான பிரேமா, கவிதா ஆகியோரின் நகைகள் செல்வராஜ் வீட்டில் தான் இருந்துள்ளது.
சம்பவத்தன்று கணவன்- மனைவி 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 18 பவுன் தங்க நகையை மர்மநபர் திருடிச்சென்றுவிட்டார். மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே மானூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.