செய்திகள்
கொரோனா பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 848 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 79 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 919 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 61 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 848 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்கி பணிகள் நடக்கிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 17 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 ஓட்டுச் சாவடி தேர்வு செய்யப்பட்டு அவற்றில் தலா 150 பேருக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பார்வையிட்டார். இன்று 17 மையங்களில் தலா 2 ஓட்டு சாவடிகள் தேர்வு செய்து அவற்றில் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.