செய்திகள்
கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம்
கொரோனாவால் வழக்கமான பணிகளை தவிர்த்து கால்நடைத்துறை செயல்படாமல் உள்ளது.
பல்லடம்,
கொரோனா பாதிப்பு காரணமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருப்பதால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காலநிலை மாற்றம் ஏற்படும் போது கால்நடைகளை கோமாரி நோய் தாக்குகிறது. இதனால் பால் உற்பத்தி குறையும். கடந்த இரண்டு மாதங்களாக கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.மழைக்காலம் துவங்க உள்ள சூழலில் மீண்டும் நோய் தாக்கும் அச்சம் உள்ளது.கொரோனாவால் வழக்கமான பணிகளை தவிர்த்து கால்நடைத்துறை செயல்படாமல் உள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற அரசு கூடுதல் கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். துவக்கத்திலேயே நடவடிக்கை எடுக்காவிட்டால் இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். அப்போது விவசாயிகளும், கால்நடைத்துறையினரும்தான் சிரமப்பட வேண்டியிருக்கும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.