செய்திகள்
கோப்புபடம்

திருமணமாகாத ஏக்கத்தில் விபரீத முடிவு - ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-20 11:34 GMT   |   Update On 2021-06-20 11:34 GMT
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திருமண ஏக்கம் காரணமாக டிரைவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி:

பொன்னேரி அருகே தடபெரும்பக்கம் ராஜா தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 26). டிரைவராக வேலை செய்து வந்த இவர், திருமணம் செய்து கொள்ளும் ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் தனது தாயிடம் திருமணம் செய்து வைக்கக்கூறி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற முருகன் தாயிடம் வழக்கம் போல் தகராறு செய்துள்ளார். பின்னர், மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் இருந்த புடவையை எடுத்து கொண்டு வெளியே சென்றார்.

அதைத்தொடர்ந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உள்ள குழாயில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தார். மகனைத் தேடி சென்ற அவரது தாய் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுது புலம்பினார்.

இதையறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News