செய்திகள்
கைது

மோகனூர் பகுதியில் மது கடத்தி வந்த 3 பேர் கைது

Published On 2021-06-18 10:20 GMT   |   Update On 2021-06-18 10:20 GMT
மோகனூர் பகுதியில் மது கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

நாமக்கல், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் திருச்சி உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் நாமக்கல் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் அருகில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் மதுப்பிரியர்கள் எல்லைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அருந்தி வருகின்றனர்.

இதனை தடுக்க மோகனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாவட்ட எல்லையான ஆண்டாபுரம், வடுகபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையிலான போலீசார் மோகனூர் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மது கடத்தி வந்த நாமக்கல் கோட்டை பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (வயது 48) என்பவரிடம் இருந்து 10 குவார்ட்டர் பாட்டில்களும், பரமத்திவேலூரை சேர்ந்த சண்முகம் என்பவர் மகன் பிரபாகரன் (29) என்பவரிடம் இருந்து 27 குவார்ட்டர் பாட்டில்களும், மணிவண்ணன் மகன் ராஜ்குமார் (30) என்பவரிடம் இருந்து 7 பீர்பாட்டில்கள் என மொத்தம் 44 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 3 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News