செய்திகள்
கொரோனா தடுப்பு பணி-மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு
தூய்மை பணியாளர்கள், காய்ச்சல் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள கணக்கெடுப்பு பணியாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கிராந்திகுமார் நியமிக்கப்பட்டார். கடந்த 14-ந்தேதி பொறுப்பேற்ற அவர் நேற்று தெற்கு உழவர் சந்தை, மீன் மார்க்கெட் மற்றும் தென்னம்பாளையம் சந்தை வளாகம் ஆகியவற்றில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றி இந்த வளாகங்கள் செயல்படுகிறதா? என பார்வையிட்டார்.
மார்க்கெட் வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை பார்வையிட்டு முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பின் மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார பிரிவு அலுவலகத்தில் பணியாளர் வருகைப்பதிவை ஆய்வு செய்தார்.
தூய்மை பணியாளர்கள், காய்ச்சல் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள கணக்கெடுப்பு பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண் டும்.
கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சேகரித்த விவரங்களை உடனுக்குடன் சுகாதார அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைவரும் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முத்தையன் கோவில் அருகே உள்ள ஓடைகளை பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது செயற்பொறியாளர் முகமது சபியுல்லா, சுகாதார அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.