செய்திகள்
மரம் சாய்ந்து காரின் மீது விழுந்தது-2 பேர் உயிர் தப்பினர்
திருப்பூரில் நடுரோட்டில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்றினால் திருப்பூர் அவிநாசி ரோடு பழைய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெரிய மரம் ஒன்று முறிந்து ரோட்டில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது விழுந்தது.
காரின் பின்புறத்தில் மரம் விழுந்ததால் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நடுரோட்டில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மரத்தை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றுக்கு பல்வேறு இடங்களில் விளம்பர போர்டுகள் மற்றும் சிறிய மரங்கள் சரிந்து விழுந்தது.