செய்திகள்
தூத்துக்குடியில் மீனவர்கள் மீன்பிடி வலைகளை சரி செய்வதை படத்தில் காணலாம்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவுபெற உள்ளதால் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்

Published On 2021-06-11 17:34 GMT   |   Update On 2021-06-11 17:34 GMT
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் படகுகளை சீரமைப்பதுடன், வலைகளையும் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:

தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதால், மீன்வளம் குறைந்து வருவதாகவும் கருதப்பட்டது. இதனால் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகு, இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இந்தத் தடை காலம் வருகிற 14-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 61 நாட்கள் தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 420 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 240 விசைப்படகுகள் உள்ளன.

இந்த படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதே போன்று மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வலை பின்னும் கூடங்களில் வைத்து மீனவர்கள் சேதம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்வதற்கு தயாராகி வருகின்றனர். அனைத்து படகுகளையும் பரிசோதனை செய்து இயக்கிப் பார்த்து வருகின்றனர். மேலும் படகுகளுக்கு புதிதாக பெயிண்டு அடித்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முழு வீச்சில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதால் மீன்பிடித் துறைமுகம் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News