செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து

Published On 2021-06-05 10:46 GMT   |   Update On 2021-06-05 10:46 GMT
விவசாயிகள் நடத்திய போராட்டத்தை சட்ட விரோதமான போராட்டம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
மதுரை:

மதுரை மாவட்டம் மேலூரில், பெரியாறு ஒருபோக விவசாயிகள் பாசன சங்கம் சார்பாக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒருபோக விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு தர்ணா போராட்டம் நடைபெற்றது. மதுரை-சென்னை தேசிய நெஞ்சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து விவசாய சங்க செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், அமலன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அமலன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி இளங்கோவன் இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனது உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை சட்ட விரோதமான போராட்டம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. 

மேலும் விவசாயிகள் போராட்டத்தின்போது பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் வழக்கில் காட்டப்படவில்லை. எனவே விவசாயத்திற்கு தண்ணீர் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News