செய்திகள்
கோப்புப்படம்

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 312 படுக்கைகள் தயார்

Published On 2021-06-02 22:58 GMT   |   Update On 2021-06-02 22:58 GMT
வடமாநிலங்களில் அதிகம் பேர் கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை:

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 312 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வடமாநிலங்களில் அதிகம் பேர் கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.

13 மருத்துவ வல்லூநர்கள் மூலம் இந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ‘ஆம்போடெசிரின்-பி’ மருந்துகளும் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி உள்ளது.

இந்தநிலையில், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 26 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 படுக்கைகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும், எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 60 படுக்கைகள் என 312 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 112 பேர், கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 2 பேர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 5 பேர் என கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தற்போது 119 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News