செய்திகள்
இணையவழிக்கற்றல் இடர்பாடுகளை களைய பிரத்யேக கமிட்டி
அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இணையவழிக்கற்றலில் உள்ள இடர்பாடுகளை களைய பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அவிநாசி:
அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டுள்ள நிலையில் வரும் கல்வியாண்டிலும் இணைய வழி கற்பித்தல் முறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையொட்டி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை உள்ளடக்கி இணைய வழியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பெற்றோர் சிலர் கூறுகையில், பல இடங்களில் மொபைல் போனில் ‘நெட்வொர்க்‘ பிரச்சினை உள்ளது. குடும்ப சூழலால் மாணவர்கள் சிலர் பகுதி நேரமாக வேலைக்கு செல்ல வேண்டியுள்ளதால் அவர்களால் இணைய வழி கல்வியில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை என்றனர்.கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கூறியதாவது:-
இணையவழி கற்றலில் உள்ள குறைகளை களைய மூத்த பேராசிரியர்கள், பெண் பேராசிரியர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்படும். இணைய வழி கற்றலில் மாணவர்கள் ஈடுபாடுடன் உரிய நேரத்தில் பங்கெடுக்க வேண்டும்.பங்கேற்கும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவது போன்றே மாணவ, மாணவிகள் நாகரிக உடையணிந்து நாகரிகமாக உரையாட வேண்டும். வரும் ஆண்டிலும், செய்முறை தேர்வு கூட இணையவழியில் நடப்பதற்கு வாய்ப்புள்ளதால் மாணவர்கள் தவறாமல் சரியான நேரத்தில் வகுப்பில் இணைய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கல்லூரி முதல்வர் ஹேமலதா தலைமையில் நடந்த கலந்தாய்வில் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.