செய்திகள்
கோப்புபடம்

மேல்மலையனூர் அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் - அலுவலரை தாக்கிய 5 பேர் கைது

Published On 2021-05-26 13:34 GMT   |   Update On 2021-05-26 13:34 GMT
மேல்மலையனூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்காக கொட்டப்பட்ட மணல், ஜல்லி ஆகியவை அகற்றப்பட்டன. அப்போது அலுவலரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அருகே வளத்தியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையை அதே பகுதியை சேர்ந்த பாரதி (வயது70), விஜயகுமார் ஆகியோர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட மணல், கம்பி, ஜல்லி ஆகியவற்றை அந்த இடத்தில் கொட்டி வைத்திருந்தனர்.

இது பற்றி அறிந்த செஞ்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தாசில்தார் நெகருன்னிசா மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கொட்டப்பட்டிருந்த மணல், ஜல்லி, கம்பிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். அப்போது அங்கிருந்த பாரதி, விஜயகுமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஜல்லியை அகற்றியபோது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சாலை ஆய்வாளர் வீரமணி என்பவரை ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கினர். அதை தடு்க்க வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவனையும் அவர்கள் தாக்க முயன்றனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றினர். தொடர்ந்து மணல், ஜல்லி, கம்பிகள் ஆகியவை அங்கிருந்து அகற்றப்பட்டது. சாலை ஆய்வாளர் தாக்கப்பட்டது பற்றியும், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் வளத்தி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பாரதி, விஜயகுமார், கண்ணன் என்கிற வெங்கடபதி (33), பார்த்திபன் (39) பரதன் (25), ஜகன் என்கிற அஜய் ஷர்மா (27) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதில் விஜயகுமாரை தவிர மற்ற 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News