செய்திகள்
ஆவின் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் ஆய்வு
திருப்பூர் ஆவின் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் ஆவின் கொள்முதல் நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் நாசர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று சங்கிலியை முறியடிக்க தமிழக முதல்வர் உறங்காமல் பணியாற்றி வருகிறார். பால் விலை குறைக்கப்பட்டதையடுத்து அனைத்து பகுதிகளிலும் அவை முறையாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரப்படுகிறது.
ஊரடங்கு காலமென்பதால் விவசாயிகள் தனியாருக்கு வழங்கிவந்த பாலையும் ஆவின் நிலையங்களில் வழங்கி வருகின்றனர். அவர்கள் பாதிக்காத வகையில் கூடுதலாக இரண்டு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை பதப்படுத்தி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசின் புதிய விலைக்கு விற்பனை செய்யப்படாத 11 விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.