செய்திகள்
கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரி மீனவர்களை மீட்க கோரி விஜய் வசந்த் எம்.பி.யிடம் மனு அளித்தபோது காட்சி

கத்தார் சிறையில் 2 மாதங்களாக தவிக்கும் 15 குமரி மீனவர்களை மீட்க வேண்டும் - விஜய்வசந்த் எம்.பி.யிடம் மனு

Published On 2021-05-24 14:13 GMT   |   Update On 2021-05-24 14:13 GMT
கத்தார் நாட்டு சிறையில் 2 மாதங்களாக தவிக்கும் 15 குமரி மீனவர்களை மீட்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்:

நாட்டுத்துறை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சிபில் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் ஆகியோர் நேற்று கூட்டாக விஜய்வசந்த் எம்.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரான் நாட்டில் இருந்து கடந்த 22-3-2021 அன்று அந்த நாட்டை சேர்ந்த ஹாசன் என்பவருக்கு சொந்தமான யாக்கோப் மற்றும் அசின் என்ற இரண்டு விசைப்படகில் குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேர், ஈரான் மீனவர்கள் 4 பேர் மற்றும் இந்திய மீனவர்கள் என மொத்தம் 28 பேர் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் 25-3-2021 அன்று கடலில் மீன் பிடித்து ெகாண்டிருந்த போது அந்த வழியாக ரோந்து சென்ற கத்தார் கடற்படையினர் குமரி மீனவர்கள் உள்பட 28 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஏப்ரல் 19-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டது.

அதாவது படகில் சென்ற அனைத்து இந்திய மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை ஈரான் முதலாளியிடம் கேட்ட போது அவர், அபராத தொகையை கட்ட முடியாது என்றும், அந்த தொகை படகின் விலையை விடவும் இரண்டு மடங்காக இருக்கிறது என்றும் கூறி மறுத்துவிட்டார்.

இதனால் அனைத்து மீனவர்களும் கடந்த 2 மாதங்களாக கத்தார் ஜெயிலில் அடைக்கப்பட்டு சரியாக உணவு கூட கிடைக்காமல் அவதிபடுகிறார்கள். எனவே குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட அனைத்து மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News