செய்திகள்
உரிய ஆவணங்கள் தாக்கல் செய்தால் ஜி.எஸ்.டி. ரீபண்ட்
உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்வோருக்கு காலதாமதமின்றி ரீபண்ட் வழங்கப்படுகிறது என்று ஜி.எஸ்.டி., கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி.,குறித்த தொடர் ஆன்லைன் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மத்திய ஜி.எஸ்.டி.,திருப்பூர் மாவட்ட துணை கமிஷனர் சித்தார்த்தன் பேசியதாவது:-
திருப்பூரில் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்வோருக்கு ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகை தாமதமின்றி வழங்கப்பட்டு வருகிறது. ஆடை உற்பத்தி துறையினர் ஏராளமானோர் காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டிய ஐ.டி.சி., 04 படிவத்தை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
தாமதமின்றி இந்த படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். ரீபண்ட் பெறுவது உட்பட ஜி.எஸ்.டி., சார்ந்து ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் மத்திய கலால் மற்றும் சரக்கு, சேவை வரித்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
ஜி.எஸ்.டி., பதிவு குறித்து ஆடிட்டர் முரளி பேசியதாவது:-
ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டாயம் ஜி.எஸ்.டி., பதிவு செய்யவேண்டும். குறைந்த வர்த்தகம் உள்ள நிறுவனங்களும், ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சத்தை நெருங்கினால், உடனடியாக பதிவு செய்து சான்று பெற்று கொள்ள வேண்டும்.
பதிவு செய்த நிறுவனங்கள் மாதம்தோறும் முறையாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வர்த்தகம் ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.