செய்திகள்
பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்- அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தாராபுரம்:
தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி ஆணையாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆய்வின் போது நகராட்சியின் செலவினங்கள், வருவாய் குறித்து விரிவாக கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நகரின் குடிநீர் தேவைகளை மேம்படுத்துவது, கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மேலும் தொற்று பரவாமல் பாதுகாப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கைகள் &குறைகள் எதுவாக இருந்தாலும் தீவிர விசாரணை நடத்தி உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். புகார் தெரிவிக்க வந்தால் நகராட்சி அடிப்படை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அவர்களிடம் கனிவாக பேசி அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நகராட்சி அலுவலர்கள் மீது பொதுமக்கள் ஆதார த்துடன் புகார்கள் ஏதாவது கொண்டு வந்தால் உடனடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். நகராட்சியின் சேவைகள்,திட்டப்பணிகள், நிதி பற்றாக்குறை எதுவாக இருந்தாலும் உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் தமிழக அரசுக்கு முறையாக பரிந்துரை செய்யப்படும் என்றார்.