கோவையில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
கோவை:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பார்த்தாஸ் (வயது 31). இவர் கடந்த 2 மாதமாக கோவையில் தங்கி வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நஸ்ரின் பேகம் (28) என்ற இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஒரு மாதத்துக்கு முன் நஸ்ரின் பேகம்(28) கோவை வந்தார். இங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா முழு ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் இருவரும் சில நாட்களுக்கு முன்பு தங்களது சொந்த ஊரான மேற்கு வங்காளத்துக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் அங்கிருந்து 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரின் பேகம் மட்டும் தனியாக கோவை வந்துள்ளார். கோவை வெரைட்டிஹால் ரோட்டில் தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது காதல் மனைவியை தேடி பார்த்தாஸ் ரெயில் மூலம் நேற்று கோவை வந்தார். அப்போது அவரை போனில் தொடர்புகொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு அவரது மனைவி நஸ்ரின் பேகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.