செய்திகள்
தற்கொலை

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த விரக்தியில் பேக்கரி ஊழியர் தற்கொலை

Published On 2021-05-16 09:33 GMT   |   Update On 2021-05-16 09:33 GMT
கோவையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த விரக்தியில் பேக்கரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவரது மனைவி ரேணுகா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி குடும்பத்துடன் கோவைக்கு வந்தார். பின்னர் கோவில்பாளையம் அருகே உள்ள கீரணத்தத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேக்கரி கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் வேலையை இழந்த சுரேஷ் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுரேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News